வைகை அணையில் தண்ணீர் திறப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
By: Nagaraj Tue, 01 Dec 2020 12:43:25 PM
தண்ணீர் திறப்பால் மக்களுக்கு எச்சரிக்கை... 'தேனி மாவட்டம் வைகை அணையில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரையில் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,' என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பாசன, குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. சிற்றாறுகள், கண்மாய்களின் உபரி நீர் வைகையில் பாய்கிறது. இத்துடன் 3 ஆயிரம் கன அடி நீரும் சேர்வதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுரை நகர் வைகை கரையோரம் வசிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தரைப்பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதால், அதன் வழியாக
கடக்கக்கூடாது. வெள்ளத்தை பார்வையிட செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றில்
இறங்கி மீன் பிடிக்கவோ, குளிக்கவோ முயற்சிப்பது ஆபத்தில் முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்
கூறுகையில், 'தொடர்ந்து மழை பெய்தால் ஆற்றில் வரும் நீரை கணிக்க முடியாது.
அதனால் மக்கள் யாரும் ஆற்றுக்கோ, கரைப் பகுதிக்கோ செல்ல வேண்டாம்,'
என்றனர்.