மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
By: Monisha Wed, 25 Nov 2020 10:37:55 AM
புயல் காரணமாக சென்னையில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 அடி முழு கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று நீர்திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.