மராட்டியத்தில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக அவசரப்படவில்லை - தேவேந்திர பட்னாவிஸ்
By: Monisha Wed, 27 May 2020 10:40:10 AM
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கூட்டணி அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கடுமையாக சாடி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று ஆன்லைன் மூலம் பேட்டியளித்த போது மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- ராகுல்காந்தி கூறியிருக்கும் கருத்துகள் சிவசேனா மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்ததையே சுட்டி காட்டுகிறது.
மேலும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இந்த தோல்விக்கான பொறுப்பில் இருந்து தப்பி ஓட பார்க்கிறது. பாரதீய ஜனதாவின் கவனம் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தான் உள்ளது. மராட்டியத்தில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக அவசரப்படவில்லை.
ஆனால் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக கூறுவது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே செய்யப்படுகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க எதிர்க்கட்சி தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.