இலங்கை மக்களுக்கு உடனடி மற்றும் நீண்டகால உதவிகள் வழங்க நாங்க ரெடி
By: Nagaraj Sun, 07 Aug 2022 10:29:47 AM
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு உடனடியான மற்றும் நீண்டகால உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது இலங்கை மக்கள் மத்தியில் சற்றே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களில் இருந்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு தீர்மானகரமான ஒன்றாக இருக்கும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
மேலும் சவால்களை எதிர்கொள்ள தேசிய வழிமுறையை உருவாக்கும் போது, சில அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த ரணில் காட்டி வரும் அர்ப்பணிப்புகளை செயலாளர் நாயகம் அங்கீகரித்துள்ளார்.
இதனை மேற்கொள்ளும் போது பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவது மாத்திரமின்றி சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதுடன் உட்பட அனைத்து தரப்பினருடனுமான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது முக்கியம் எனவும் அன்டோனியோ குட்டரெஸ், அதிபருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.