நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்... ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு தகவல்
By: Nagaraj Sat, 30 July 2022 5:30:01 PM
ஹங்கேரி: கற்று கொள்ள வேண்டும்... நான்கு மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள இந்தியாவிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய கற்றுக் கொள்வதற்காக இங்கு வந்துள்ளதாக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராபர்ட் கப்பாஸ் தெரிவித்தார்.
சென்னை ஒலிம்பியாட் ஏற்பாடுகள் வருகிற 2024ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். முன்னதாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரின் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.
செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் பொதுச்
செயலாளர் ராபர்ட் கப்பாஸ் கூறியதாவது: “ நாங்கள் அடுத்த செஸ் ஒலிம்பியாட்
போட்டியினை வருகிற 2024ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடத்த உள்ளோம். இந்த 44வது
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நாங்கள் ஒரு கண்காணிப்பாளராக கலந்து
கொள்கிறோம். 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை நடத்த உள்ள எங்களுக்கு அது
உதவியாக இருக்கும்.
இதுவரை ஒலிம்பியாட் குறித்து சில விஷயங்களை
நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். சென்னையில் உள்ள கடைக்கோடி மனிதர் வரை
அனைவருக்கும் இங்கு நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் குறித்து தெரிந்துள்ளது.
அவர்களின் உற்சாகத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள்
ஒலிம்பியாட் ஏற்பாடுகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறோம். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.