சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் - டிரம்ப்
By: Karunakaran Sun, 27 Sept 2020 07:19:17 AM
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர், தென்சீன கடல் விவகாரம் என இருநாடுகள் இடையே நிலவி வந்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்த மோதல் மேலும் வெடித்தது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
டிரம்ப்பின் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய ஜனாதிபதி டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார்.
தேர்தலுக்கான பிரசாரத்தின் போது அதிபர் டிரம்ப் பேசுகையில், சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது. சீன வைரஸ் நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது. அதை நாம் மீண்டும் உருவாக்குவோம் என்று கூறினார்.
மேலும் அவர், தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன் என்று தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பாகவே கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கொண்டு வர டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.