மதச்சார்பற்ற கொள்கையை கைவிட மாட்டோம்: தேவகவுடா திட்டவட்டம்
By: Nagaraj Thu, 28 Sept 2023 5:31:20 PM
பெங்களூரு: பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் மதச்சார்பற்ற கொள்கையை கைவிட மாட்டோம் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க ஜனதா தளம் (எஸ்) இடமளிக்கவில்லை.கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி உருவானது. அந்த அரசாங்கம் 14 மாதங்களில் கவிழ்ந்தது.
கூட்டணி ஆட்சியை கலைத்தது யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பியது யார்? பா.ஜ.க. ஆட்சி அமைக்க யார் காரணம்? குமாரசாமியை முதல்வராக்க நாங்கள் யாருடைய வீட்டுக்கும் செல்லவில்லை. ஆனால் அவரை முதல்வராக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் வேண்டாம் என்றேன்.
இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது ஜனதா தளம் (எஸ்) ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது? என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் ஆலோசித்து முடிவெடுத்தோம்.
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பதுதான் முக்கியம். அப்போது பேசிய ராகுல் காந்தி, ஜனதா தளம் (எஸ்) கட்சியை பா.ஜ.க.வின் பி-டீம் என்று குறிப்பிட்டார்.
பேசுவதற்கு முன் அவர் யதார்த்தத்தை அலச வேண்டும். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை காங்கிரஸால் காப்பாற்ற முடியுமா? காங்கிரஸ் ஒரு குடும்பத்துக்காக அரசியல் செய்கிறது. ராஜ்யசபா தேர்தலில் பாரூக்கை நிறுத்தினோம்.
அவரை காங்கிரஸ் தோற்கடித்தது. குமாரசாமியிடம் இருந்து அரசியல் வாழ்க்கை பெற்ற செல்வராயசாமி அமைச்சராகியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு என்ன கேவலம் செய்திருக்கிறது என்பதற்கு 100 உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும் மதச்சார்பின்மை கொள்கையை கைவிட மாட்டோம். இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு தேவகவுடா கூறினார்.