- வீடு›
- செய்திகள்›
- கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் - அமெரிக்கா திட்டவட்டம்
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் - அமெரிக்கா திட்டவட்டம்
By: Karunakaran Thu, 03 Sept 2020 1:29:22 PM
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. இது பற்றிய தகவல்களை சீனா ஆரம்ப கட்டத்தில் வழங்கவில்லை. சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால் ஏற்பட்ட மோதலால் உலக சுகாதார நிறுவனத்தின் தொடர்பை அமெரிக்கா துண்டித்தது. மேலும், அந்த அமைப்புக்கான நிதி வழங்கலையும் நிறுத்தியது.
தற்போது, உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் ஏறத்தாழ 170 நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சம அளவில் வினியோகிப்பதற்கும் நடந்து வருகிற உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியில் சேரப்போவதில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகையில், இந்த வைரசை தோற்கடிப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது சர்வதேச கூட்டாளிகளை ஈடுபடுத்தும். ஆனால் ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. 6 தயாரிப்பாளர்களிடம் இருந்து 80 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
செபி என்று அழைக்கப்படுகிற தொற்றுநோய் தடுப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் ரிச்சர்டு ஹேட்சட் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவும், பிற பணக்கார நாடுகளும் ஏற்கனவே தடுப்பூசியின் முதல் டோஸ்களை தங்களுக்கு ஒதுக்கி வைத்துள்ளன. இது கவலை அளிக்கிறது. உலகளாவிய தலைவர்களை நாம் சம்மதிக்க வைக்க வேண்டியது உள்ளது. ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் ஒரு தடுப்பூசி கிடைக்கும்போது, அது உலகளவில் பகிரப்பட வேண்டும் என்று கூறினார்.