அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம்
By: vaithegi Sat, 07 Jan 2023 4:00:07 PM
சென்னை: தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து தற்போது பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இந்த அறிக்கையில், இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்துற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.