சேலத்தில் தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு- கனிமொழி எம்.பி.
By: Monisha Mon, 21 Dec 2020 3:21:05 PM
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை நாள்தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று பிற்பகல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொள்கிறார்.
இதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை சேலம் தொகுதியில் தொடங்கினேன். அங்கு தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் அ.தி.மு.க. ஆட்சியின் புகார்களை தவிர்த்து வேறு எதுவும் அங்கு இல்லை.
பா.ஜனதா துணைத்தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்று கூறியுள்ளார். முதலில் பாராளுமன்றத்தினை கூட்ட சொலுங்கள். பொங்கல் பரிசாக ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. அரசு ரூ. 2500 மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது என அவர் கூறினார்.