மே 31-க்கு பிறகு என்ன நடக்கும்? பிரதமர் நரேந்திர மோடியுடன் அமித் ஷா ஆலோசனை
By: Monisha Fri, 29 May 2020 4:44:04 PM
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கி உள்ளன. உள்நாட்டு விமான சேவை, ரெயில் சேவை தொடங்கி உள்ளது. அதேசமயம், கொரோனா தொற்று எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது மே 31ம் தேதிக்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியிலும், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது? என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன், அமித் ஷா ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிலையில் தற்போது அவர், பிரதமருடன் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.