கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால் என்ன நடக்கும் ?
By: Karunakaran Thu, 11 June 2020 2:08:46 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. யாரும் கற்பனை செய்து கூட பார்க்காத அளவிற்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் 11-ந் தேதி, இதனை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏறத்தாழ 4 லட்சத்து 12 ஆயிரம் பேர் உயிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா குறித்து புகழ்பெற்ற ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுரையை சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் பூ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்துள்ளனர். இதில், கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால், இன்புளுவென்சா காய்ச்சலில் ஏற்பட்ட கதி இதிலும் ஏற்படும் எனவும், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறி இருப்பதால், சீனாவில் இது மீண்டும் கிளர்ந்தெழும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாதுகாப்பான, நம்பகமான தடுப்பூசி உருவாக்கும் வரை கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் அல்லது குறைவாக இருக்க வேண்டும். தற்போது கொரோனா பரவி கொண்டிருப்பது காலவரையின்றி தொடரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1918-ம் ஆண்டு உலகமெங்கும் பரவிய இன்புளுவென்சா காய்ச்சல் காரணமாக 5 கோடி முதல் 10 கோடி வரையிலானவர்கள் உயிரிழந்தனர். இதன் இறப்புவீதம் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.