மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
By: Monisha Thu, 30 July 2020 10:05:38 AM
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டுள்ளது. இது பற்றி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய கல்விக்கொள்கை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். பள்ளிக்கல்வியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஆண்டுகள் கொண்ட பள்ளிக்கல்வி 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் என வகைப்படுத்தப்பட்டு பாட திட்டம் வகுக்கப்படும். இதுதவிர 3 ஆண்டுகள் மழலையர் பள்ளி வகுப்பும் உண்டு.
5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.
பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலமும் பாடம் கற்பிக்கப்படும். மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது. பள்ளி மற்றும் உயர் கல்வியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் நிலையில், சமஸ்கிருத பாடமும் இருக்கும். விருப்பப்பட்ட மாணவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பாட திட்டம் மற்றும் படிக்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும். உயர் கல்வி நிறுவனங்களில் 2035-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், புதிதாக 3½ கோடி இடங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சட்ட மற்றும் மருத்துவ கல்லூரிகள் தவிர பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் அந்த வகுப்பில் சேர்ந்து படிக்க புதிய கல்வி கொள்கை அனுமதி வழங்குகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும். பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு 15 ஆண்டுகளுக்குள் படிப்படியாக தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். இது போன்ற பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.