சென்னையில் வெயிலின் தாக்கம் உயர காரணம் என்ன? வானிலை மையம் விளக்கம் அளிப்பு
By: vaithegi Wed, 17 May 2023 11:15:53 AM
சென்னை: சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே வெயிலின் தாக்கம் உயர்ந்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது.
மேலும் கடந்த 15-ம் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது. நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என அவர் கூறினார்.