அக்டோபர் மாதம் இத்தனை இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
By: vaithegi Wed, 30 Nov 2022 10:24:03 PM
இந்தியா: 23 லட்சத்து 24 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் ..... இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. எனவே அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும்.
இதனை அடுத்து அதன்படி, புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், விதிமீறல்கள் காரணமாக அக்டோபர் மாதம் 23 லட்சத்து 24 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில், 8.11 லட்சம் கணக்குகள் புகார் அளிக்கப்படுவதற்கு முன்பாகவே முடக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 701 புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் கணக்குகளையும், செப்டம்பர் மாதத்தில் 26.85 லட்சத்திற்கும் அதிகமாக கணக்குளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.