கர்நாடகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - மந்திரி சுரேஷ்குமார் பதில்
By: Karunakaran Thu, 09 July 2020 11:49:56 AM
கர்நாடகத்தில் காரோண வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடக அரசு திணறி வருகிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்த தகவல் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்தோ அல்லது ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது குறித்தோ மாநில அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்கும். பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வதந்திகளை பெற்றோர் மற்றும் மாணவர்கள் நம்ப வேண்டாம். ஆன்லைனில் கற்பித்தலை தொடங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆன்லைன் கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆன்லைன் கல்வியுடன் ஆப்லைன் கல்வியும் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக 10 முக்கியமான அம்சங்களை அந்த குழு பரிந்துரை செய்துள்ளது என்று கூறினார்.