இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது ?
By: Karunakaran Wed, 10 June 2020 3:46:04 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வின் நோக்கம் இந்திய கொரோனா வைரஸ் தொற்று மரபணு வரிசை வேறுபாட்டை தீர்மானிப்பதாகும். அதன்படி, 294 இந்திய கொரோனா வைரஸ் மரபணு வரிசையை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில், இந்திய கொரோனா வைரஸ்கள், கூடுதலாக ஜி (50 சதவீதம்), ஐ (6.7 சதவீதம்) உயிரின கிளைகளால் (‘கிளேடு’களால்) செறிவூட்டப்பட்டவை ஆகும். மேலும், 40 சதவீத மாதிரிகள், அறியப்படாத மரபணு வேறுபாடுகளை கொண்டுள்ளன என தெரிய வந்துள்ளது. உலகளவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவினாலும், இந்தியாவை பொறுத்தமட்டில் 2.66 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இதுவரை பரவியுள்ளது.
நீண்ட கால ஊரடங்கு, தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கொரோனா நோயாளிகளை தீவிரமாக கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்துதல், நோய் எதிர்ப்பு பாதுகாப்பு, வைரஸ் விகார மாறுபாடுகள் போன்றவை தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறைவான அளவுக்கு பரவ காரணம், என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.