போக்குவரத்து கழக காலி பணியிடங்களை நியமிக்க திமுக அரசு தயக்கம் காட்டுவது ஏன்?
By: Nagaraj Mon, 26 June 2023 7:58:12 PM
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன்?
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஆட்களை நியமிக்கும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில், தற்போது ஓய்வு பெற்றவர்களை மீண்டும் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
வயதானதால் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பது திமுக அரசுக்கு தெரியாதா? காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாற்றுக் காரணங்களை கூறி தொடர்ந்து தாமதப்படுத்துவதில் மர்மம் என்ன?
ஓட்டுநர், நடத்துனர் பயிற்சி முடித்த எண்ணற்ற இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் போது, அரசு ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆன நிலையிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு தராமல் இருப்பது ஏன்? போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.