பிரதமரின் சொகுசு விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன் ? - ராகுல்காந்தி கேள்வி
By: Karunakaran Wed, 07 Oct 2020 8:13:51 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சியினரும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதனை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்திருந்தனர்.
தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல்காந்தி, என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ஏர் இந்தியா ஒன் விமானத்தில் சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. தன்னுடைய நண்பர் டிரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளார் என்று கூறினார்.