சீன எல்லை மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?- ராகுல் காந்தி கேள்வி
By: Karunakaran Wed, 17 June 2020 2:49:26 PM
நேற்று முன்தினம் இந்திய-சீன எல்லை பகுதியான லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இந்த மோதல் நடைபெற்றது.
இந்த மோதலில் இதுவரை இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த மோதல் காரணமாக இந்தியா,சீனா இடையே போர் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலாளர் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரியவேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.