புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை
By: Monisha Thu, 03 Dec 2020 11:11:45 AM
வங்கக்கடலில் பாம்பனுக்கு 90கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 12கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் நேற்று இரவு கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மழை பெய்த இடங்களில் பதிவான மழையின் விவரம் வருமாறு;- நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19செ.மீ., தலைஞாயிறில் 14செ.மீ. மழை பதிவானது.
மேலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13செ.மீ., குடவாசலில் 10செ.மீ., திருவாரூரில் 9செ.மீ., நன்னிலத்தில் 8செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 12செ.மீ., தங்கச்சிமடத்தில் 8செ.மீ., பாம்பனில் 6செ.மீ. மழை பதிவானது.