தமிழகம், புதுச்சேரியில் பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு
By: Nagaraj Fri, 18 Sept 2020 09:53:37 AM
இன்று மழை பெய்ய வாய்ப்பு... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். சென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
வட கிழக்கு வங்கக்
கடல் பகுதியில் வரும் 20-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா என்பது
குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பதிவான மழை
அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம்
வால்பாறை, சென்னை ஆலந்தூர், சென்னை விமான நிலையம், நாமக்கல், திருவள்ளூர்
மாவட்டம் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.