தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில், ‘WIFI’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது
By: vaithegi Sun, 26 June 2022 5:10:59 PM
தமிழகம்: தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக மலிவான விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டு மூலமாக செய்யல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து மத்திய அரசு ‘பி.எம்.வாணி’ என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்கு ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தப்பட்டு இணையதள சேவை வழங்க உள்ளது.
பி.எம்.வாணி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வசதிகள் உள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில், ‘WIFI’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
அதன்படி ரேஷன் கடைக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் மொபைல் போன் அல்லது லேப்டாப் கொண்டு வந்து இணையதள சேவை இதன் மூலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனை பயன்படுத்தும் நபர்கள் இணையதள சேவை பயன்படுத்துவதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் மூலமாக ரேஷன் கடைகளில் கூடுதலான வருவாய் கிடைக்கும். அத்துடன் இந்த திட்டத்தை முதற்கட்டமாக தமிழகத்தில் அதிக இட வசதியுடன் கூடிய சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த கூட்டுறவுத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் ரேஷன் கடைகள் கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட 2 கிமீ துாரத்திற்குள் இருப்பதால் இந்த திட்டம் ரேஷன் கடைகளின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.