Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூடலூரில் வயல்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள்; விவசாயிகள் கவலை

கூடலூரில் வயல்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள்; விவசாயிகள் கவலை

By: Monisha Mon, 30 Nov 2020 11:14:44 AM

கூடலூரில் வயல்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள்; விவசாயிகள் கவலை

கூடலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பல கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கூடலூர் அருகே பல குக்கிராமங்களில் இரண்டு காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு வருகிறது.

தற்போது கூடலூர் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அந்த பகுதிக்கு வரும் காட்டு யானைகள் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்களும் நேரில் வந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வனப்பகுதிக்குள் செல்லும் காட்டு யானைகள் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

field,harvest,wild elephant,damage,loss ,வயல்,அறுவடை,காட்டுயானை,சேதம்,நஷ்டம்

நேற்று முன்தினம் சுண்டவயல் பகுதியில் காட்டுயானைகள் இரவு நேரத்தில் புகுந்தன. அவை அனந்தன், சண்முகம் உள்ளிட்ட விவசாயிகளின் வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:- நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மட்டுமே சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் ஆண்டுதோறும் விளைவிக்கப்படுகிறது. ஆனால் நெற்கதிர்களை அறுவடை காலம் நெருங்கும் போது காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவில் வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறோம். ஆனால் உரிய இழப்பீடு தொகையை வனத்துறை மற்றும் வேளாண் துறையினர் வழங்குவது இல்லை. காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களை சேர்க்காததால் காப்பீடு செய்ய முடியாமல் உள்ளது. எனவே காட்டு யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும். மேலும் நெற்பயிர்களை காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
|
|