கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது
By: Karunakaran Sat, 22 Aug 2020 12:41:08 PM
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அவதியடைந்து வரும் இந்த சூழ்நிலையிலும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும், சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் மற்றும் நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன, இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த முயன்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக, அங்கிருந்த 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.