மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டியிடுவாரா ?
By: Karunakaran Mon, 08 June 2020 10:39:16 AM
கர்நாடக மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இன்னும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த 4 இடங்களில் பாஜகவிற்கு 2, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் என்பது உறுதியாகிவிட்டது.
4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் பெரும்பான்மை இல்லை. ஜனதா தளம் கட்சிக்கு இன்னும் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால், 4-வது இடத்தில் வெற்றி பெற முடியும். இந்த இடத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிட்டால், அவரை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தேவேகவுடா இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறியிருந்தார். காங்கிரசாரின் வற்புறுத்தலினாலே துமகூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது, கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாமா என தேவேகவுடா ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
காங்கிரஸ் தெரிவிக்கும் ஆதரவினால், வெற்றி பெறுவது எளிது என்பதால் தேவேகவுடா தனது மனநிலையை மாற்றிக் கொண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த முடிவை இன்று அறிவிக்கவுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.