நாளை முதல் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்
By: Nagaraj Sun, 31 May 2020 7:55:23 PM
பழைய கட்டணம்தான்... நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பேருந்துகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளதால், எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து, இன்று மாலை முடிவு செய்யப்படும் என போக்குவரத்து துறை கூறியுள்ளது. இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களிடம் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது என்றும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி, முழு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்றும் சூழல் வந்தாலும், சுழற்சி முறையில் பணி வழங்கி, அனைவருக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.