- வீடு›
- செய்திகள்›
- ஊட்டி, கொடைக்கானலை போன்று குற்றாலத்திற்கு அனுமதி கிடைக்குமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஊட்டி, கொடைக்கானலை போன்று குற்றாலத்திற்கு அனுமதி கிடைக்குமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
By: Monisha Thu, 10 Sept 2020 4:55:02 PM
தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி பிரசித்தி பெற்ற ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இ-பாஸ் பெற்று தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குளுகுளு சீசன் நிலவும். அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் கடந்த ஒரு மாதமாக மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிப்பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி களை இழந்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு சீசன் காலத்தில் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் கொரோனா தடை காரணமாக வருவாய் கிடைக்கவில்லை. குற்றாலத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் வருகையை நம்பியே உள்ளனர்.
எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலை போன்று குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.