ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?...மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
By: Monisha Mon, 29 June 2020 09:11:58 AM
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மார்ச் 25-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்டங்களாக நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கில் நாட்டின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,295 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.