கனடா அரசாட்சியில் மகாராணியின் மறைவு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
By: Nagaraj Sat, 10 Sept 2022 2:21:06 PM
கனடா: என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்... பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு கனேடிய அரசாட்சியில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே இற்றை வரையில் நீடித்து வந்தார். மகாராணியின் மறைவினால், கனடாவின் அரசாங்க ஆட்சி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார பேராசிரியர் பிலிப் லகாஸீ தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரகம் பிரித்தானியாவின் முடிக்குரிய ஆட்சியாளர் கனடாவின் அரச தலைவர் என்பதில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாராணியின் சிரேஸ்ட புதல்வர் மூன்றாம் சார்லஸ் மன்னர் பிரித்தானிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது அரசாங்க ஆட்சியில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய முடிக்குரிய ஆட்சி அதிகாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்காக கனடாவின் ஆட்சி அதிகார பொறிமுறையில் எவ்வித மாற்றங்களையும் செய்யத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் சட்ட ரீதியான ஆவணங்களில் மகாராணி என குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் மன்னர் என மாற்றம் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக அரசியல்வாதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது கூறும் வாசகங்களில் பிரித்தானிய மகாராணி என்பதற்கு பதிலாக பிரித்தானிய மன்னர் என சொல்லப்படும் என விளக்கியுள்ளார்.