தெலுங்கானாவில் கணவர் கொடூரமாக தாக்கியதால் மனமுடைந்த பெண் தற்கொலை
By: Karunakaran Sun, 28 June 2020 12:11:02 PM
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்த லாவண்யா லஹாரி என்பவர், ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரளூ என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், லாவண்யா லஹாரி கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். வீடியோ வெளியான சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது தனது மகளை அவரது கணவர் தாக்கிய சிசிடிவி வீடியோவை லாவண்யாவின் பெற்றோர் வெளியிட்டுள்ளனர். அதில் லாவண்யாவின் கணவர், அவரை கடுமையாக தாக்கியதும், அந்த வீட்டின் செல்லப்பிராணி நாய் அந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்வதும் தெரிய வந்தது. கணவன் மிகவும் கொடூரமாக தாக்கியதால் தனது வயிற்றிலை கையை வைத்தபடி அழுதுகொண்டே லாவண்யா செல்வது போன்ற இந்த வீடியோ தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் வெங்கடேஷ்வரளூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட லாவண்யா தான் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கணவர் வெங்கடேஷ்வரளூக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், தன்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமைபடுத்துவதாக லாவண்யா தெரிவித்துள்ளார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.