இந்தோனேசியாவில் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த பெண்
By: Karunakaran Wed, 22 July 2020 4:03:07 PM
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியில் ஹெனி நூரேனி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 28 வயதாகிறது. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து ஹெனி நூரேனி கூறுகையில், நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன, இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாக ஹெனி நூரேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனைமகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர் கூறுகையில், கர்ப்பமாக இருக்கும் 25,000 வழக்குகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள். இருப்பினும் ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை. இது ஒரு ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம் என்று கூறினார்.