ஐகோர்ட் தீர்ப்பின்படி தெலங்கானாவில் தலைமைச் செயலக கட்டிடத்தை இடிக்கும் பணி தொடக்கம்
By: Karunakaran Wed, 08 July 2020 12:02:03 PM
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது. அதன்பின், அமராவதியில் ஆந்திர மாநிலத்துக்கு மிக பிரம்மாண்ட தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதேபோல், தெலங்கானாவிலும் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தை இடிக்கப்படும். பின்னர் அதே இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல்மந்திரி சந்திரசேகர ராவ்வின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஐதராபாத்தில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தை இடிப்பதை எதிர்த்து தெலுங்கானா ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.
அண்மையில், தலைமைச் செயலக கட்டிடத்தை இடிப்பதற்கு ஒப்புதல் வழங்கி தெலுங்கானா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.தற்போது ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி, தலைமைச் செயலக கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் தலைநகர் அமராவதி எனவும், தெலுங்கானாவில் தலைநகர் ஐதராபாத் எனவும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.