- வீடு›
- செய்திகள்›
- ரஷியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
ரஷியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
By: Karunakaran Sat, 15 Aug 2020 2:58:54 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இருப்பினும் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகமடைய செய்துள்ளது. தடுப்பூசி விஷயத்தில் ரஷியா அவசரப்படுவதாக பல உலக நாடுகள் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
இந்நிலையில் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு பேட்டி அளித்தபோது, ரஷியாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி, அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை என்று கூறினார்.
மேலும் அவர், ந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனமானது, ரஷியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரும் நாட்களில், அனேகமாக திங்கட்கிழமையன்று எங்கள் தடுப்பூசியின் முன் மருத்துவ மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.