புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை நாடியுள்ள உலக சுகாதார நிறுவனம்
By: Karunakaran Thu, 02 July 2020 11:11:31 AM
சீனாவில் கடந்த டிசம்பர் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை இன்னும் விடுபட முடியவில்லை. தினமும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
உலகமெங்கும் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வைரஸ், பன்றிகளிடையே பரவி மனிதர்களையும் தாக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இவை உடனடியாக மனிதர்களை தாக்கும் ஆபத்து இல்லை என்றாலும், கொரோனா வைரஸ் போல மாறும் அச்சுறுத்தல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்களை பெறவும், ஒருங்கிணைந்து செயல்படவும் சீனாவை உலக சுகாதார நிறுவனம் நாடியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தாகேஷி கசாய் கூறுகையில், இந்த புதிய வைரஸ், பன்றிக்காய்ச்சல் வைரசின் திரிபு என கூறப்படுவதால், இது தொற்று நோயாக மாறும் அபாயம் உள்ளது. இது குறித்து மதிப்பிட சீனாவின் ஒருங்கிணைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடியுள்ளது. சரியான இடர் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.