கொரோனாவால் உலக அளவில் 24 மணிநேரத்தில் 4700 பேர் பலியாகின்றனர்
By: Nagaraj Mon, 29 June 2020 5:46:04 PM
கொரோனாவால் உலகளவில் 24 மணி நேரத்தில் 4,700 பேர் இறப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி தெரிய வந்துள்ளது.
கொரோனாவால் உலக மக்கள் தொகையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையுமே இந்த நோய் பாதிக்கிறது. தற்போது, கொரோனாவால் இறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இதுவரை நிகழ்ந்த இறப்புகளின் புள்ளி விவரங்களின்படி உலகளவில் 24 மணி நேரத்தில் 4,700 பேர் இறப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் 1- ந் தேதி முதல் 27- ந் தேதிக்குள் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 196 பேரைக் கொரோனா கொன்றுள்ளது. ஒவ்வொரு 18 விநாடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைவதாகவும் இறப்பவர்களில் கால்பங்கு மக்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ராய்ட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 5 மாதங்களில் மலேரியாவை விட அதிகம் பேர் கொரோனா பாதித்து இறந்துள்ளனர். ஐந்து மாதங்களில் மட்டும் மாதத்துக்கு சராசரியாக 78,000 பேர் உலகம் முழுக்க கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார மையத்தின் அறிக்கையின் படி, கடந்த 2018- ம் ஆண்டு ஹெச்.ஐ.பி
பாதித்து மாதத்துக்கு சராசரியாக 68,000 பேரும் மலேரியா பாதித்து சராசரியாக
36,000 பேரும் இறந்துள்ளனர். தற்போது, இந்த நோய்களை விட கொரோனாதான் அதிகமான
உயிர்களைப் பலி வாங்கி வருகிறது.
கொரோனாவால் வட அமெரிக்கா
அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகள்,
ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவிலும் மிக வேகமாக
கொரோனா பரவி வருவதால் எச்சரிக்கை மிக அவசியம். இந்தியாவில் 5.5 லட்சம்
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16, 475 பேர்
மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.