உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை கடந்தது; உயிரிழப்பு 5 லட்சத்தை தாண்டியது
By: Nagaraj Sun, 28 June 2020 12:58:37 PM
ஒரு கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு... உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் கடந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 6 மாதங்களில் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. அதிவிரைவாகப் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றினால் தற்போது உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 54 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பினாலும் மேலும் 57 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்றின் மையமாகிப் போன அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக தொற்றின்
வேகம் குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் உச்ச நிலையை அடைந்தது.
நேற்று ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் புதிதாக பெருந்தொற்றுக்கு உள்ளானதால்,
அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்தைக்
கடந்துள்ளது.
இதேபோல் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால்
இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு தளர்த்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அந்த
நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மீண்டும் அமல்படுத்துகின்றன.
கொரோனாவால்
அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸில் அனைத்து மதுபான
விடுதிகளையும் மூட ஆளுநர் கிரெக் அப்பாட் உத்தரவிட்டுள்ளார். ஃபுளோரிடா
மகாணத்திலும் உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபானங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிரேசில் நாட்டிலும் கடந்த 24 மணி
நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உண்டானதால் இதுவரை 12
லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், நேற்று ஒரே நாளில்
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தோர் எண்ணிக்கை
56 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.
நேற்றைய நிலவரப்படி,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 700க்கும் அதிகமான
மக்கள் உயிரிழந்ததால் மெக்ஸிகோ 25 ஆயிரம் பேரைப் பலிகொடுத்து அடுத்த
இடத்தில் தொடர்கிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே இங்கிலாந்தில் 43
ஆயிரம் பேரையும், இத்தாலியில் 35 ஆயிரம் மக்களையும், பிரான்சில் 30 ஆயிரம்
பேரையும்,ஸ்பெயினில் 28 ஆயிரம் மனிதர்களையும் கொரோனா காவு வாங்கியுள்ளது.
இதேபோல் ஈரான், ஜெர்மனி, பெரு ஆகிய நாடுகளில் பல ஆயிரம் பேர் வைரஸ்
தொற்றினால் மாண்டு போயுள்ளனர்.
அதேபோல் 500 பேர் முதல் ஆயிரம் பேர்
உயிர்பலி கொடுத்த நாடுகளின் பட்டியல் ஏராளமாக உள்ளன. கொல்லுயிரியால்
பாதிப்புக்கு ஆளாபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை
தெரிவித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தடுப்பு மருந்துகளை உடனே
கண்டுபிடிக்க உலக நாடுகளை அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.