உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.30 கோடியை தாண்டியது
By: Karunakaran Mon, 13 July 2020 10:09:28 AM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.71 லட்சத்தைக் கடந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸு க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா, ரஷ்யா நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. பொருளாதார நடவடிக்கைக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டது.