உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.15 கோடியைத் தாண்டியது
By: Karunakaran Sun, 16 Aug 2020 1:52:32 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு மேல் பரவிமனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.67 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2,14,94,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.43 கோடியைத் தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை உயரலாம். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டாலும், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.