உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Fri, 07 Aug 2020 10:47:02 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 7 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 1 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 61 லட்சத்து 75 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 187 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போதுவரை, கொரோனாவில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 516 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,62,780 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், மெக்ஸிகோ, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்து இடத்தில் உள்ளன.