பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கூட்டாளி, யாஹ்யா முஜாகித்துக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை
By: Karunakaran Fri, 13 Nov 2020 08:04:27 AM
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவரது கூட்டாளி யாஹ்யா முஜாகித். இவர் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தாவா இயக்கத்தின் செய்தி தொடர்பாளரும் ஆவார். இவர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நீதிபதி இஜாஸ் அகமது பட்டர், 2 வழக்குகளில் யாஹ்யா முஜாகித்துக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்குகளில் ஒன்றில் பேராசிரியர் ஜப்பார் இக்பாலுக்கும், ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உறவினரான பேராசிரியர் ஹபீஸ் அப்துல் ரகுமான் மாக்கிக்கும் தலா 16 ஆண்டுகளும், மற்றொன்றில் தலா ஒரு ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் உத் தாவா இயக்கத்தின் மூத்த தலைவர்களான அப்துல் சலாம் பின் முகமது மற்றும் லுக்மான் ஷா ஆகிய இருவர் மீது மேலும் சில பயங்கரவாத நிதி வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீதான வழக்குகளில் சாட்சி விசாரணை 16-ந்தேதி தொடங்குகிறது.