பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் உயர்வு; ஏற்றுமதியாளர்கள் கவலை
By: Monisha Fri, 04 Dec 2020 10:26:35 AM
பின்னலாடை தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல் ஆகும். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.34 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, நவம்பர் மாதத்தில் ரூ.41 ஆயிரத்து 500-ஆக உயர்ந்தது. தற்போது இது ரூ.42 ஆயிரத்து 500-ஆக மேலும் அதிகரித்துள்ளது.
இவை கொள்முதல் செய்யப்பட்டு நூற்பாலைகளுக்கு வரும் போது மேலும் பணம் செலவு செய்யப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தி வருகின்றன. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்ந்து வருவது ஏற்றுமதியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:- வழக்கத்தை விட சீசன் தொடங்குவதற்கு முன்பே பஞ்சு விலை இந்தியாவில் உயர்ந்து காணப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்து காணப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழக நூற்பாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.
தற்போதைய பஞ்சு விலை சீராக இருக்கும் பட்சத்தில் நூல் விலையும், உயர்வின்றி சீராக இருக்கும். வருகிற 2 மாதங்களில் பருத்திகளின் வரவு, இந்தஆண்டுக்கான விலையை தீர்மானிக்கும் என அவர்கள் கூறினர்.