கொரோனா வைரஸால் சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு-எடியூரப்பா
By: Karunakaran Sat, 13 June 2020 12:02:36 PM
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து சேவைகள், சுற்றுலாக்கள்,தொழில்துறை என அனைத்தும் மூடப்பட்டன. எந்த சேவையும் இல்லாததால் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று கன்னடம், கலாசாரம், சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், ஊரடங்கு காலத்தில் 16 ஆயிரத்து 95 கலைஞர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.3.21 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அதன்பின் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் 20 சுற்றுலா தலங்களை மேம்படுத்த ஒரு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த தலங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இதை செயல்படுத்த அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த துறையை நம்பியுள்ள 3 லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் அபாயத்தில் உள்ளதாகவும், சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொரோனாவை தடுக்க சுற்றுலாத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஊரடங்கால் கர்நாடகத்தில் சிக்கிய வெளிநாட்டினர் 6,780 பேர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.