கல்வி உதவித்தொகைக்கு அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
By: vaithegi Wed, 26 Oct 2022 2:33:52 PM
சென்னை: கால அவகாசம் நீட்டிப்பு.. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சோ்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.மேலும் தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அதன்படி கல்வி உதவித்தொகைக்கு அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.