யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல்... போலீசார் குவிப்பு
By: Nagaraj Wed, 03 Aug 2022 10:23:55 PM
புதுடில்லி: யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல்... டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால்
ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இந்நிலையில், காங்., தலைவர் சோனியா
மற்றும் அவரது மகனும் காங்., - எம்.பி.,யுமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத்
துறை விசாரித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம்
நடத்தியது.
நேற்று (ஆக.,2) டில்லியில் உள்ள
ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன்
தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று(ஆக.,3)
டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா
அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும்,
தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும்
உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ்
தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.