இளைஞர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும் - அஜித் பவார்
By: Monisha Sat, 30 May 2020 11:06:48 AM
மஹராஷ்டிரா மாநிலம், புனே பிம்பிரி சின்ஞ்வட் பகுதியில் நேற்று துணை முதல்-மந்திரி அஜித் பவார் புதிய பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தை திறந்து வைத்த பிறகு அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹராஷ்டிரா உள்ளது. இதனால் நாம் கடும் பொருளாதார பிரச்சினையை சந்தித்து வருகிறோம். அதில் இருந்து மீள விரும்புகிறோம். மாநில அரசு விரைவில் சிறப்பு நிதி திட்டங்களை அறிவிக்கும். இதுகுறித்த முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும்.
நாங்கள் மத்திய அரசிடமும் உதவி கேட்டு கொண்டு இருக்கிறோம். பிரதமர் காணொலி காட்சி மூலம் பேசும் போது மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து இதுகுறித்து பேசி வருகிறோம்.
ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். எனவே ஊரகபகுதிகளில் இளைஞர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும். கொரோனா பிரச்சினையில் மாநிலத்தை மீட்டு கொண்டு வர எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.