- வீடு›
- விளையாட்டு›
- நடத்தை விதி மீறலால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மீது நடவடிக்கை
நடத்தை விதி மீறலால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மீது நடவடிக்கை
By: Nagaraj Wed, 26 July 2023 06:45:29 AM
புதுடில்லி: நடத்தை விதிமீறல் காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி டாக்காவில் நடைபெற்றது. இந்த ஒரு நாள் போட்டி டையில் முடிவடைந்தது. முன்னதாக, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1 – 1 என்று வெற்றி பெற்றிருந்ததாலும், மூன்றாவது போட்டி டையில் முடிந்ததாலும் இந்த இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
பொதுவாக, ஆட்டம் ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால், போட்டியை நடத்த நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூ-க்கு எதிராக ஹர்மன்பிரீத் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதோடு, ஆடுகளத்தில் தனது மட்டையைக் கொண்டு ஸ்டெம்புகளை தாக்கியதுடன், கோப்பையை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வில் வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானாவிடம் கோபமாகப் பேசினார்.
மேலும், ‘நடுவர்கள் இல்லாமல் நீங்கள் இந்தப் போட்டியை சமன் செய்திருக்க முடியாது; அவர்களும் புகைப்படத்தில் இடம் பெறட்டும்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடுவரின் முடிவில் கருத்து வேறுபாட்டைக் காட்டுவது தொடர்பாக, வீரர்கள் மற்றும் வீரர்களின் ஆதரவுப் பணியாளர்களுக்கான ICC நடத்தை விதி 2.8ஐ மீறியதற்காக அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், நடத்தை விதிகளை மீறியதற்காக அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி அவருக்கு தடை விதித்துள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை இந்திய கேப்டன் ஒப்புக்கொண்டதோடு, எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்களின் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளுக்கும் ஒப்புக்கொண்டார். இதனால், முறையான விசாரணை தேவையில்லை என்பதால் தண்டனைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.