- வீடு›
- விளையாட்டு›
- ரிஷப்பண்ட் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய வீரர் அறிவுறுத்தல்
ரிஷப்பண்ட் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய வீரர் அறிவுறுத்தல்
By: Karunakaran Tue, 10 Nov 2020 3:57:07 PM
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரிஷப்பண்ட் கடந்த காலங்களில் சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2018-ம் ஆண்டு ஒரு சதம், 5 அரை சதத்துடன் 684 ரன்கள் குவித்தார். இதில் 37 சிக்சர்கள் அடங்கும். 2019-ல் 3 அரை சதத்துடன் 488 ரன்கள் எடுத்தார். 27 சிக்சர்கள் அடித்தார். ஆனால், இந்த ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் வழக்கமாக விளையாடும் அதிரடியை வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவர் 13 ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 7 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலாவது ரிஷப்பண்டை தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பிராட்ஹாக் கூறுகையில், ரிஷப்பண்டை இந்த சீசனில் கொஞ்சம் மரபு ரீதியிலான கிரிக்கெட்டை ஆடுமாறு பாண்டிங் கூறி இருப்பதுபோல் தெரிகிறது. இன்னிங்ஸ் முழுவதும் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் ரிஷப்பண்ட் ஒரு சிறந்த அதிரடி வீரர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கக் கூடியவர். அவர் எந்த ஒரு பந்துவீச்சையும் அபாரமாக ஆடக்கூடியவர். அவரது கைகளை கட்டிப்போட்டால் எப்படி? என கூறியுள்ளார்.
மேலும் அவர், கடந்த 2 தொடர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150-க்கும் மேல் இருந்தது. எதிர் அணியிடம் இருந்து ஆட்டத்தை தனது அணி பக்கம் சுலபமாக ஒரு சில பந்துகளில் மாற்றக்கூடியவர் ரிஷப்பண்ட். இறுதிப்போட்டி யிலாவது அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பாண்டிங் அனுமதிக்க வேண்டும் என பிரட்ஹாக் கூறியுள்ளார்.