- வீடு›
- விளையாட்டு›
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகல்
By: Karunakaran Fri, 31 July 2020 5:31:32 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டி ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்றதாகும். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. இதனால் அமெரிக்க ஓபன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், வீரர், வீராங்கனைகள் கலக்கமடைந்துள்ளனர். ரசிகர்கள் இல்லாமல், கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், நானும், எனது அணியினரும் சின்சினாட்டி ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிக்காக இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். அமெரிக்க ஓபன் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான போட்டிகள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், டுத்த ஆண்டு அமெரிக்க ஓபனில் ஆடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார். அமெரிக்க ஓபனில் இருந்து ஏற்கனவே விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆகியோரும் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.