- வீடு›
- விளையாட்டு›
- வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சர் எவர்டன் வீக்ஸ் மரணம்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சர் எவர்டன் வீக்ஸ் மரணம்
By: Karunakaran Fri, 03 July 2020 11:51:46 AM
1940, 50-களில் சர் எவர்டன் வீக்ஸ், சர் கிளைட் வால்காட், சர் பிராங் வாரெல் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சிறந்து விளங்கியவர்கள் ஆவர். பார்படோசில் ஓரிரு கிலோமீட்டர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்த இவர்கள் ஒருசேர மூன்று வார இடைவெளியில் வெஸ்ட் இணடீஸ் அணிக்குள் நுழைந்தனர்.
‘மூன்று டபிள்யூ’க்கள் என்ற செல்லப்பெயருடன் இவர்கள் வலம் வந்தனர். இவர்களில் வாரெல், வால்காட் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது எவர்டன் வீக்ஸ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவருடைய வயது 95 ஆகும்.
1948-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் 12 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். டெஸ்டில் தொடர்ச்சியாக 5 இன்னிங்சில் சதம் கண்ட ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 1948-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமும், இந்தியாவுக்கு எதிராக 4 சதமும் அடித்துள்ளார். இவர் மொத்தம் 48 டெஸ்டுகளில் விளையாடி 15 சதம், 19 அரைசதத்துடன் 4,455 ரன்கள் (சராசரி 58.61) சேர்த்துள்ளார்.
காலில் அடிக்கடி காயம் அடைந்ததால் தனது 33-வது வயதிலேயே கிரிக்கெட்டை விட்டு விலகினார். தற்போது அவரது மறைவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், எவர்டன் வீக்ஸ் ஒரு ஜாம்பவான், எங்களது ஹீரோ. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தந்தை. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். சிறந்த மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளது.